×

நாமக்கல்லில் இருந்து அதிமுக வேட்பாளருக்கு அனுப்பப்பட்ட ரூ.1 கோடி திருச்சியில் சிக்கியது: வருமானவரித்துறை விசாரணை வளையத்தில் எடப்பாடி பழனிசாமி

திருச்சி: நாமக்கல்லில் இருந்து அதிமுக வேட்பாளருக்காக கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவி, அவரது கணவர், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஆகிய 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அனுப்பிய பணமா என்ற கோணத்தில் வருமானவரித்துறை, காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். தமிழகத்தில் முதல்கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ளன. இதனால் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருகட்டமாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் தொகுதியில் உள்ள திருச்செங்கோட்டில் பிரசாரம் செய்தார். நாமக்கல் தொகுதியில் அவர் ஏற்கனவே பிரசாரம் செய்தார். தற்போது, 2வது முறையாக அதே தொகுதியில் பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார். இதற்காக, நேற்று அவர் சேலத்தில் முகாமிட்டிருந்தார்.

இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து பல தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், ரூ.5 கோடியை, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதிக்கு அனுப்பி வைக்கும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து பரஞ்ஜோதியின் அக்காள் மகள் திவ்யாவின் கணவர் அன்பரசன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு திருச்சி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் நாமக்கல்லில் இருந்து டிஎன் 48 ஏஇ என்ற ஹூண்டாய் ஐ10 காரில் பணம் வருவதாக தெரிந்து கரூரை தாண்டி வருவதாக தெரிந்தது.

திருச்சியில் இருந்து தனிப்படை போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதனால், காரில் இருந்து பணம் மற்றொரு காருக்கு மாற்றப்பட்டது. இதனால் அந்த காரையும் போலீசார் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
போலீசார் பின்தொடர்வது தெரிந்ததால், 3வதாக ஸ்கார்பியோ காருக்கு பணத்தை மாற்றினர். அதற்குள் கார் திருச்சி நகருக்குள் வந்தது. அதேநேரத்தில் போலீசார் முதல் 2 காரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் 3வது காரையும் விரட்டிச் சென்றனர். அதோடு திருச்சி மாவட்டம் முழுவதும் சாலைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடந்தது.

இதனால் காரில் கொண்டு வரும் பணத்தை பிடிக்கத்தான் சோதனை நடத்துவதாக அறிந்து கொண்டவர்கள், காரில் இருந்து பைக்கில் கடத்தியுள்ளனர். ஆனால் 3வது காரையும் போலீசார் பிடித்தனர். அதற்குள் பணம் பைக்கில் சென்று விட்டது. இதனால் காரில் இருந்த பஞ்சாயத்து தலைவின் கணவர் அன்பரசன், திருவெரும்பூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம், ஆலத்தூர் நேதாஜி நகரைச் சேர்ந்த பிரதாப் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி மாவட்டம் எட்டரையில் உள்ள அன்பரசுவின் வீட்டை போலீசார் மற்றும் பறக்கும்படை, வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனையிட்டனர்.

அதில் வீட்டில் ஒரு பேக்கில் இருந்த ரூ.1 கோடி மட்டும் சிக்கியது. 4 கோடி ரூபாய் மாயமாகிவிட்டது. இதனால் அந்தப் பணம் மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதியின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதா அல்லது வேறு எங்காவது கொண்டு செல்லப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் திருச்சியில் தேர்தல் செலவின பார்வையாளராக குஜராத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரி ஸ்ரம்தப் சின்கா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அன்பரசுவின் வீட்டில் சோதனை நடப்பது தெரிந்து விரைந்து வந்தார். பிடிபட்டவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்டமாக பஞ்சாயத்து தலைவி திவ்யா, அவரது கணவர் அன்பரசன், சிவப்பிரகாசம், பிரதாப் ஆகியோரிடம் போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் செலவுக்காக பணம் அனுப்பப்பட்டுள்ளதால், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பரஞ்ஜோதி மற்றும் சில முன்னாள் அமைச்சர்களை வருமான வரித்துறையினர் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். பிடிபட்ட பணத்துக்கும் கட்சியின் மேலிடத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் ரூ.1 கோடி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிமுக வினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாமக்கல்லில் இருந்து அதிமுக வேட்பாளருக்கு அனுப்பப்பட்ட ரூ.1 கோடி திருச்சியில் சிக்கியது: வருமானவரித்துறை விசாரணை வளையத்தில் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Namakkal ,Trichy ,Edappadi Palaniswami ,Election Flying Squad ,Dinakaran ,
× RELATED தகாத உறவு காதலியின் கணவர் கொலை அதிமுக பஞ்சாயத்து தலைவர் கைது